Friday, September 20, 2013

ஜோதிர்லதா கிரிஜா – நாவல்களில் பெண்களின் நிலை

                    கட்டுரையாளர்    மா. ஜெகதாம்பாள்,    
      முனைவர் பட்ட ஆய்வாளர்  
                    அரசு கலைக்கல்லூரி, சேலம் - 7.
(நெறியாளர்- முனைவர் ஜ.பிரேமலதா, 9488417411, தமிழ் இணைப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி,சேலம்-7.)
.

              ஜோதிர்லதா கிரிஜா நாவல்களில் பெண்களின் நிலை

                மக்களின் வாழ்வை பிரிதிபலிக்கும் சமகால இலக்கியங்களுள் நாவலும் ஒன்று. எங்குப் பார்த்தாலும் பெண்களின் சிக்கல்கள் பெரிதாகப் பரிணமித்துக் கொண்டு வருகின்றன. நம் இந்திய நாடு சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆகியும், பெண்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவுமில்லை. ஆங்காங்கே பெண் சாதனையாளர்கள் வானத்தில் காட்சியளிக்கும் நட்சத்திரங்களைப் போல் ஒளிவீசினாலும், (பிரகாசித்தாலும்) சமூகம், குடும்பம் இவற்றால் எவ்வாறெல்லாம் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைத் தமிழ்நாட்டுப் பெண் எழுத்தாளர்கள் பதிவு செய்து வருகின்றனர். அவ்வகையில் ஜோதிர்லதா கிரிஜாவின் நாவல்கள் பல வகையில் ஆய்வுக்கு எடுத்தாளப்படுகின்றன. அப்படைப்புகளில் காணப்படும் பெண்களின் நிலை பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது.  
        

 பெண் என்பவள் யார்?   
                                                                                                                                                               
பெண் என்பதன் பொருள் அழகு! பெண் என்பவள் ஆண்களுக்குத் துணையாக, அம்மாவாக, மனைவியாக, சகோதரியாக, தோழியாக, வாழ்நாள் முழுவதும் ஆணின் இன்ப, துன்பங்களைப் பகிர்ந்து வாழ்பவள். ஒரு எந்திரம் கூட இயக்குபவர் இன்றி இயங்காது என்பது நாம் அறிந்ததே, அவ்வாறிருக்கும் பொழுது, வாழ்க்கைச் சக்கரம் மட்டும் இயக்குபவர் இன்றி, இயங்க முடியுமா? வாழ்க்கையைச் செம்மையாக, இயக்கும் சக்தியாகப் பெண் இருக்கிறாள். சக்தியில்லையெனில் சிவமில்லைஎன்று சொல்லக்கூடிய வகையில் பெண் இருக்கிறாள். முதலில் தன்னைக் காத்துக் கொண்டு பின்னர் தன்னைச் சார்ந்தவர்களையும் பேணிப் பாதுகாக்கிறாள். இவ்வாறு ஆணுக்குத் துணையாக செயல்பட்டு சரிநிகராக வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்கள், எவ்வாறெல்லாம் ஆண்களால் பாதிக்கப்படுகிறார்கள். என்பதை ஜோதிர்லதா கிரிஜாஅவரது எட்டு நாவல்களில் நாங்களும் வாழ்கிறோம்’, ‘போராட்டம்’, ‘மன்மதனைத் தேடி’ ,‘ தனிமையில் இனிமைக் கண்டேன்’, ‘துருவங்கள் சந்தித்த போது’, ‘மறுபடியும் பொழுது விடியும்’, ‘அழகைத் தேடி’, ‘வித்தியாசமானவர்கள்ஆகிய கதைகளில் பெண்கல்வி, ஆண் - பெண் நட்பு, வரதட்சணைக் கொடுமை, மறுமணம், பொருந்தா மனம், பாலியல் வன்முறை, ஆணாதிக்கம், கற்புநிலை, சந்தேக குணம், திருமண ஏக்கம் என்று பல்வேறு கோணங்களில் ஜோதிர்லதா கிரிஜாபல கருத்துக்களைக் கூறியுள்ளார். அதில் சிலவற்றை மட்டும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.    
பெண் கல்வி                                                                      ஒரு பெண்ணுக்கு கல்வியளிப்பது அந்த குடும்பத்திற்கே கல்வியளிப்பதற்குச் சமம். அப்படிப்பட்ட பெண்களுக்குப் பெற்றோர்கள் கல்வியளிக்க மறுக்கிறார்கள். நாங்களும் வாழ்கிறோம்என்ற நாவலில் மஞ்சு என்ற பெண் 8 – ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு, பெற்றோரிடம் சென்று தான் 10 – ஆம் வகுப்பு வரை படிக்க ஆசைப்படுகிறேன் என்று கூறுகிறாள். """"அவளின் அம்மா அவளென்ன ஆண்பிள்ளையா, படிக்க வைத்துதான் ஆகவேண்டுமென்று"" (நாங்களும் வாழ்கிறோம், ப.1) கூறுவதற்கு என்கிறாள். பெண் பிள்ளைதானே அவளுக்கு எதற்கு படிப்பறிவு, குடும்பத்தைப் பேணிப்பாதுகாக்க அனுபவ அறிவு போதும் என்று கூறிவிடுகிறாள். """"பெண் குழந்தைக்கு படிப்பெதற்கு"" (நாங்களும் வாழ்கிறோம், ப.6).

 ஆனால் சமுதாய விழிப்புணர்வுள்ள அவளின் அக்கா பெண்களுக்குக் கட்டாயம் கல்வியறிவு தேவை. பெண்களுக்குத் திருமணம் கூட தேவையில்லை. தனது சொந்தக் காலில் நின்று, ஆணின் துணையை எதிர்பார்க்காமல் வாழ கல்வியறிவு கட்டாயம் தேவை என்பதனை, """"திருமணம் கூடத் தேவை இல்லை, படிப்பறிவும் ஒருவனை அண்டிப்பிழைத்தே வாழ்ந்தாக வேண்டிய துரதிஷ்டம் இல்லாமல் இருத்தலும், இன்றைய மாறிய சூழ்நிலையில் பெண்களுக்குத் தேவை"" ((நாங்களும் வாழ்கிறோம், ப.279) என்ற வரிகளில் பெண்களுக்குக் கல்வியறிவு கட்டாயம் தேவையென்பதைச் சுட்டிகாட்டிய ஆசிரியர், இதை ஒரு சில ஆண்களும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதை, ‘தனிமையில் இனிமை கண்டேன்என்ற நாவலில் வாணி என்ற பெண் குடும்ப வறுமையின் காரணமாக அலுவலகத்தில் பணிபுரிகிறாள்.

 அங்கு பணிபுரியும் அய்யப்பன் என்பவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறுகிறாள். அவளின் தாய் கீழ் ஜாதிக்காரன் அவனைத் திருமணம் செய்து கொண்டால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்றதும், அவளின் அப்பா, அந்தப் பையனை அழைத்துவா நான் பேசி முடிக்கிறேன் என்கிறார். அதற்கு அவளின் தாய் அரளிவிதையை அரைத்துக் குடித்து இறந்துவிடுகிறாள். இதைத் தாங்கிக் கொள்ள முடியாத வாணியின் அப்பா, """"பொம்மானாட்கள் படிக்கணும்கிறது இதுக்குத்தான் ----- படிப்பறிவு இல்லாதனாலதான் இந்த மாதிரி ஜாதி புத்தி ஏற்பட்றது மனுஷாலுக்கு"" (தனிமையில் இனிமை கண்டேன், ப.167) என்று புலம்புகிறார். படிப்பறிவு இருந்தால் மட்டும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று வாணி புலம்புகிறாள். இதனை,""""ஆ......மா....... படிச்சவா மட்டும் என்ன வாழ்ந்தார்களாக்கும்"" அப்படியில்லமா வாணி படித்தால் அறிவும் சிந்தனையும் வளரும். இது மாதிரி செயலில் ஈடுபடமாட்டார்கள். """"அப்படி இல்லேம்மா வாணி ..... கொஞ்சத்துக் கொஞ்சமாவது அறிவு வளரும் சிந்தனை வளரும். முடிவுகள் அப்ப மாறும்"" (தனிமையில் இனிமை கண்டேன், ப.168) என்ற வரிகளின் மூலம் சமுதாய விழிப்புணர்வற்ற பெற்றோர்கள் பெண்கல்வியை மறுத்தாலும், ஔவையாரைப் போன்ற பெண்ணும், பாரதியார் போன்ற ஆண்களும் , பெண்களுக்குக் கல்வியறிவு கட்டாயம் என்பதை வலியுறுத்தியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். 
     
வரதட்சணைக் கொடுமை    
                        மன்மதனைத் தேடிஎன்னும் நாவலில் இந்தியக் குடும்பங்களில் உள்ள பெண்களின் திருமணத்திற்கு முக்கியமான சிக்கல்களில் ஒன்று வரதட்சனைக் கொடுமை. இதனால் பெண்களைவிட அவர்களின் தந்தை தான் பாதிக்கப்படுகின்றனர். தந்தையில்லாவிடில் தந்தை இடத்தில் இருந்து அந்த பெண்ணிற்குத் திருமணம் செய்து வைப்பவர்களே பாதிப்படைக்கின்றனர் என்பதை பூமா அலுவலகத்தில் பணிபுரியும் சுந்தரமூர்த்தியைத் திருமணம் செய்துகொள்ள நினைக்கிறாள். ஒருநாள் எதேச்சையாக, அவரின் வீட்டுக்குச் செல்லும் போது அவரது அறையின் முன் பக்கத்தில் இருந்த வாசகத்தைப் படித்துவிட்டு, யாரோ ஒரு சத்தியவான் அவள் முன்பிருந்து வாய்மை ததும்பிய வெண்கலக் குரலில் கத்துவது போல் கற்பனை செய்கிறாள். அப்படி எழுதிருந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை என்றும் நினைக்கிறாள் வீட்டில் 35 வயதில் ஒரு விதவை அக்கா, 28 வயதில் வரதட்சணையால் திருமணமாகி ஒரு வருடத்தில் வீட்டிற்கு வந்துள்ள ஒரு தங்கச்சி, வரதட்சணையால் 26 வயதில் திருமணமாகாத மற்றொரு தங்கச்சி இப்படியிருக்கும் பொழுது,                                                                                                                                                                          """"நல்லது செய்திட நடந்திடும் கால்கள்,                                                                                            புல்லது போக்கிட புடைத்திடும் தோள்கள்                                    கொடுத்துக் கொடுத்துக் களைத்திடும் கைகள்
கொடுமை யகற்றிடக் கொதிக்கும் உள்ளம
துன்பங் கண்டுடன் கசியும் கண்கள் 
 பேதையர் உயர்ந்திட வாதிடும் வாய்கள்  
இன்பம் நல்கிடத் துடிக்கும் இதயம்  
 இல்லாமை அகற்றிட பொங்கிடும் மார்பு   
  இவைதமைக் கொண்டுள்ள இளைஞர் யாவரும்                             இணையற்ற அழகர் எனவே தெளிந்தேன்""(மன்மதனைத் தேடி, ப.119)                                                            ஒரு ஆணைத் திருமணம் செய்துகொள்ள வரதட்சணை, ஒரு பெண்ணுக்கு எவ்வளவு தடையாக இருக்கிறதோ, அதைவிட ஆண்களுக்குப் பாரமாக இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.  மேலும், மறுபடியும் பொழுது விடியும்என்னும் நாவலில் தான் ஒரு நுகர்பொருள் இல்லை என்கிற ஞானம் பெண்ணுக்கு வரவேண்டும் என்று கூறவரும் ஆசிரியரே, இதனால் பெண்கள் மட்டும் பாதிப்பதில்லை ஆண்களும் தான். """"வரதட்சிணையால் ஏதோ பெண்கள் மட்டுந்தான் பாதிக்கப்பட்றதா ஒரு போதும் நெனைக்காதேள்! இப்ப எனக்கு முப்பதஞ்சு வயசு ஆறது. எங்கப்பா பத்து வருஷத்துக்கு முந்தி காலமாயிட்டார். என்னோட மூணு தங்கைகளுக்கும் கல்யாணம் பண்ண வேண்டிய பொறுப்பு என்னோடதாயிற்று. இன்னும் ஒரு தங்கை இருக்கா. அவளை கரையேத்திட்டுதான் நான் பண்ணிக்க முடியும்!"" (மன்மதனைத் தேடி, ப. 374) கூறவந்த ஆசிரியர் வரதட்சணை என்ற ஒன்று கொடுக்கவும் கூடாது, வாங்கவும் கூடாது என்று இரண்டு தரப்பிலயும் பிடிவாதமாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அதை ஒழிக்கமுடியும் என்று முடிவையும் அவரே கூறிவிடுகிறார். இதனையே, மு.பூங்கோதை தமது கவிதையில்,        """"தட்சணை கொடுக்க மாட்டோம் - வர தட்சணை இனி கொடுக்க மாட்டோம்!  பெண்ணின் உணர்வினை மதிக்கிறஆணையே மணாளனாய்   தேர்ந்தெடுப்போம்!"" (ராணி, 18.10.2009, ப.15)        இந்த வரிகள் மூலம் பெண்ணின் உணர்வை மதிப்பவனே ஆண் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
                 
 ஏழைப் பெண்களின் நிலை                                       ஏழைகளின் உழைப்பைச் சுரண்டிக் குடிக்கும் மேல்வர்க்க ஆணாதிக்கம் ஏழைப் பெண்களின் கற்பைச் சூறையாடவும் தயங்குவதில்லை. இதனை மன்மதனைத் தேடிஎன்னும் நாவலில் பூமாவின் தோழி கமலா வீட்டு வறுமை காரணமாக அலுவலகத்திற்கு வேலைக்குச் செல்கிறாள். அங்கிருக்கும் நிர்வாகி அவளின் கற்பைச் சூறையாடிவிடுகிறான். அவனுடன் திரைபடத்திற்குப் போகவில்லை என்றால் வேலையை விட்டு நிறுத்தி விடுவேன் என்கிறான். """"போகவில்லையென்றால் நிறுத்திவிடுவேன் என்றார். ஒவ்வொரு சனிக்கிழமையென்றும் அவருடன் சினிமாவுக்குப் போவேன். இதுவரையில் மூன்று சினிமா பார்த்திருக்கிறோம்..... மனசு பக்பக்கென்று அடித்துக் கொள்ளும் கூட்டம் இல்லாத படத்துக்கு ஹையஸ்ட் க்ளாஸ் டிக்கெட் வாங்கி அழைத்து கொண்டு போவார். அப்போதுதானே அவரது விசமங்களுக்குத் தோதாக இருக்கும்""(மன்மதனைத் தேடி, ப.14) என்ற வரிகளில் சுட்டிக் காட்டியுள்ள ஆசிரியர்.
                                                                         மேலும், ‘நாங்களும் வாழ்கிறோம்என்னும் நாவலில் மஞ்சுவின் குடும்பம் சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலையில், அவளின் அம்மா வீட்டு வேலை செய்ய கேட்டு திரிகிறாள். ஒரேயொரு டாக்டர் வீட்டில் மட்டும் வேலை கிடைக்கிறது. அதுவும் ஒருமாதம் கழித்துதான் என்று கூறிவிடுகின்றனர். தனது குழந்தைகளின் பசியைப் போக்க இன்றிலிருந்தே வருகிறேன் வேலைக்கு என்கிறாள. அதற்கு அந்த டாக்டர் மனைவி ஊரிலிருந்து வரும்வரை தினமும் 9 மணிக்கு மேல் வந்துவிட்டுப் போ என்று கூறுகிறான். """"என் பேச்சிலிருந்து நம் ஏழைமையைத் தெரிந்து கொண்டுவிட்ட அந்த டாக்டர், தன் மனைவி ஊரிலிருந்து வரும் வரையில்  தினமும் இரவு ஒன்பது மணிக்குமேல் வந்து போகச் சொன்னான்..... இதற்கு மேல் சொன்னா, அசிங்கம் மஞ்சு அசிங்கம்..... என் உடம்பு நடுங்குகிறது"" (நாங்களும் வாழ்கிறோம், ப.251) என்ற வரிகள் உயிரை காப்பாற்றக் கூடிய டாக்டர்களே இவ்வாறு நடந்து கொண்டால் மற்ற ஆண்களுக்குச் சொல்ல வேண்டுமா என்ற யாதார்த்த நிலையை ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
                 
 பாலியல் கொடுமை
      போராட்டம்என்னும் நாவலில் பணக்கார வர்க்கத்தைச் சேர்ந்த விசக்கிருமிகள் எவ்வாறெல்லாம் பெண்களைத் துன்புறுத்துகின்றனர் என்பதனை, ஏழைப் பெண்ணான ராசம்மாவை, பணக்காரப் பையன் ருங்மாங்கதன் காதலிக்கிறான். இதை பிடிக்காத அவனின் அப்பா பணபலத்தைப் பயன்படுத்தி நான்கு ரவுடிகளை அனுப்பி நாசம் செய்துவிட்டுத் தனது மகனுக்கு (ருங்மாங்கதனுக்கு) அவரே இடது கையால் ஒரு கடிதம் எழுதி ராசம்மா கெட்டுப் போய்விட்டாள் என்று எழுதி அனுப்பிவிடுகிறான். """"நீ மணக்கப்போகும் ராசம்மா இடுக்குப்பட்டியில் நான்கு ரவுடிகளிடம் சிக்கிக் கற்பிழந்தாள். நாங்கள் பொய் சொல்லவிலலை. அவனையேக் கேட்டு பார் அப்படின்னு இடது கையால் எழுதுற தந்திரம் உங்களுக்கு மட்டும்தான் தெரியுமா"" (போராட்டம், ப.277) என்ற ருங்கமாங்கதனின் தங்கை அவளின் அப்பாவிடம் கேட்கும் போது மௌனம் சாதிக்கிறான்.

            பெண்மையைக் கடவுளாய், மலர்களாய், இயற்கையாய், அன்பாய், அகமாய், புறமாய் என்றெல்லாம் எண்ணற்ற சொற்களால் புகைவண்டி பாதைபோல கூறிக் கொண்டே செல்கின்றனர். ஆனால், அன்று தர்மன் சூதாட்டத்தில் தோற்றுப்போனதற்காக பாஞ்சாலி சேலையை உறுவி களங்கப்படுத்தினான் துரியோதனன். ஆனால் இன்றோ பச்சிளம் குழந்தைகளைக் கூட பாலியல் பலாத்காரம் போன்ற பாதகச் செயல்புரிகிறார்கள் கயவர்கள்.                              
""""ஓடி விளையாடு பாப்பா! நீ              ஓய்ந்திருக்கலாகாது பாப்பா!    
கூடி விளையாடு பாப்பா!                   
நீ ஒரு குழந்தையை வைய்யாதே பாப்பா!

                                         
என்று பாரதி பாடினான். ஆனால் இன்று ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்ததைப் பார்க்கும் போது பாரதி இருந்திருந்தால் பழிக்குப்பழிதீர்த்திருப்பான். பல்வேறு நிகழ்வுகளில் பச்சிளம் குழந்தைகள் தொடங்கி, பாரினிலே பாலியல் பலாத்காரம் என்பது பலவகைகளிலும் பெண்ணுக்கு அநீதிகள் நடந்தேறிக் கொண்டேதான் இருக்கின்றன என்பதை ஜோதிர்லதா கிரிஜா போராட்டம்என்னும் நாவலில் கூறுகிறார்.     

 பெண்ணுக்கு ஏற்படும் அநீதிகள்                                               மன்மதனைத் தேடிஎன்னும் நாவலில் குடும்ப வறுமையின் காரணமாக வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஏற்படும் அநீதிகள் பற்றி கூறும்போது, பூமா அலுவலகத்திற்கு வேலைக்கு போகிறாள். அங்குள்ள நிர்வாகி தன்னோடு சினிமாவுக்கு வரும்படி கூப்பிடுகிறான். பூமா முறைத்துப் பார்க்கிறாள். கமலாவைக் கேட்டுக்கொள் என்கிறான். """"மேனேஜர் என்னமோ சினிமாவுக்கு வருகிறாயா என்கிறாரே? நான் கொஞ்சம் முறைப்பாகப் பேசினேன். கமலாவைக் கேள் என்கிறார்"" (மன்மதனைத் தேடி, ப.14) பூமாவின் கேள்விக்குக் கண்ணீரைப் பதிலாக அளிக்கிறாள். கமலா, பிறகுதான் தெரிகிறது, குடும்ப வறுமையின் காரணமாக வேலைக்கு வந்தேதான் ஆக வேண்டும். ஆகையால் கற்பையிழந்தே தான் ஆகவேண்டும். """"போகவில்லையென்றால் நிறுத்திவிடுவேன் என்கிறான்"" (மன்மதனைத் தேடி, ப. 16) மறுநாள் கூப்பிட்டனுப்புகிறான். பூமா உடனே செல்கிறாள்.

 """"இந்த முறைப்பெல்லாம் வேண்டாம். நான் சொல்லுகிறபடியெல்லாம் கேட்கிறவர்கள் மட்டுமே இந்தக் கம்பெனியில் தொடர்ந்து வேலை பார்க்க முடியும்..... அதற்கு உடன்படாதவர்கள் வீட்டுக்குப் போகலாம்"" என்று பதிலே சொல்லாமல் வெளியேறிவிடுகிறாள்.                            மீண்டும் வேறு அலுவலகத்தில் வேலை கிடைக்கிறது. அங்கு 50 பேர் பணிபுரிகின்றார்கள். தனக்கு எந்தப் பிரச்சனையும் வராது என்று நினைத்துச் செல்கிறாள். பூமா, பத்து நாட்கள் கழிந்ததும் நிர்வாகி கூப்பிட்டனுப்புகின்றான். அங்கு சென்று நின்றதும் உதவி நிர்வாகி நாங்க எதற்கு வரச் சொன்னோம் தெரியுமா என்று கேட்டு சிரித்துவிட்டு, எங்க இருவரையும் அனுசரித்துப் போனாதான் இங்கே இருக்கமுடியும். """"என்ன பேசாமல் இருக்கிறாய்!.... எங்கள் இருவரையும் அனுசரித்துக் கொண்டு போனால்தான் நீ வேலையில் இருக்கமுடியும்... நீ எங்களுக்குத் தேவைப்படும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஓட்டலுக்கு வரச் சொல்லுவோம் வந்து எங்களுடன் ஒருமணி நேரம் இருந்துட்டு போகவேண்டும். அதற்குத் தனியாக பணம் கொடுப்போம். எங்களிடம் வேலை பார்க்கிறவள் என்பதற்காகப் பண விசயத்தில் ஏமாற்ற மாட்டோம்!... வற்புறுத்தல் எதுவும் கிடையாது. விருப்பமிருந்தால் இருக்கலாம். இல்லாவிட்டால் போய்விடலாம். அதாவது வேலையை விட்டுவிட்டு உனக்கு புரிகிறதென்று நினைக்கிறோம்"" (மன்மதனைத்தேடி, ப.43) இந்த வரிகளில் ஆண்களின் கீழ்த்தரமான நிலையைச் சுட்டிக் காட்டியுள்ளார் ஆசிரியர். 
கட்டுப்பாடுகள்                                                                      நம் இந்திய நாட்டில் பெண்களுக்கென்று தனியாக கட்டுப்பாடுகள் விதித்து, அதன்படி தான் நடந்து கொள்ள வேண்டுமென்று அவர்களின் மேல் தினிக்கின்றனர். இதனால் அவர்களால் வாய்விட்டு பேசவும் முடிவதில்லை. சிரிக்கவும் முடிவதில்லை. இதனை மறுபடியும் பொழுது விடியும்என்னும் நாவலில் குமாரசாமி என்பவன், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குப் பணம் சம்பாதிப்பதற்காக போகிறார். அப்பொழுது அங்கிருந்த ஒரு ஆண், குமாரசாமியைப் பார்த்து பேசுகிறார். நான் இந்தியாவிற்குச் சுற்றுப் பயணமாக வந்தேன். உங்க நாட்டில் பெண்களுக்குக் கட்டுபாடுகள் உண்டாமே, அதுவும் பேசுவதற்கும் சிரிப்பதற்கும் கூட கட்டுப்பாடுகளாமே என்று கேட்டதும், """"பெண்களுக்கு இந்தியாவில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பற்றி என்னிடம் நிறையப்பேசி அவர் குமைந்து குமறினார். உங்கள் நாட்டில் பெண்கள் இரைந்து சிரிக்கும் உரிமைகூட அற்றவர்களாமோ அப்படியா?"" (மறுபடியும் பொழுது விடியும், ப.138) குமாரசாமி அவமானப்பட்டுப் போகிறான். """"தன் அக்கா தங்கைகளைத் தன் அம்மா அங்கு நிற்காதே, இங்குப் பார்க்காதே, சத்தமாய் பேசாதே, வாயைப் பிளந்து கொண்டு என்ன சிரிப்பு! திரௌபதி சிரித்ததால் தான் கெட்டுப்போனாள் என்றெல்லாம் சொல்லி மிரட்டி வளர்த்து வந்துள்ளது பற்றி நினைத்துப் பார்க்கிறான்"" (மறுபடியும் பொழுது விடியும், ப.138)

இப்பொழுதெல்லாம் இந்தியா எவ்வளவோ முன்னேறிவிட்டது. பெண்கள் படிக்கிறார்கள், திருமணம் செய்து கொள்கிறார்கள், வேலைக்குப் போகிறார்கள் என்று  கூறிக் கொண்டிருக்கும் போது, """"பின் ஏன் இத்தனை மருமகள் எரிப்புகள் இந்தியாவில் நடக்கின்றன. பெண் குழந்தைகள் பிறந்தவுடனே சில ஊர்கள் புதைத்து விடுகிறார்களாமே. இதென்ன? காட்டு மிராண்டித்தனம். பெண்ணின் வீட்டுக்குத்தானே ஆண்கள் பணம் கொடுத்து கொண்டு போகனும்"" (மறுபடியும் பொழுது விடியும், ப.158) என்றெல்லாம் கேட்டதும் குமாரசாமிக்கே இந்திய நாட்டின் மீது வெறுப்பு வருகிறது நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையென்று ஏற்றுக்கொள்கிறான். அவர்கள் கேட்ட கேள்விகளிலிருந்து இந்தியாவிலுள்ள பெண்கள் எப்படியெல்லாம் ஆண்களால் பாதிக்கப்பட்டும், கட்டுப்படுத்தப்பட்டும் உள்ளார்கள் என்பதை ஆசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார்.
                                         
 தொகுப்புரை   
      ஜோதிர்லதா கிரிஜாதமது படைப்புகளின் மூலம் ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த பெண்ணிற்கு உண்டாகும் பல்வேறு வகையான சிக்கல்களைப் பதிவுசெய்துள்ளார். இச்சிக்கல்கள் களையப்படும் வரை சமுதாய முன்னேற்றம் நிகழாது என்பதை இக்கட்டுரை வழி அறியமுடிகிறது.                    
துணைநூற்பட்டியல்
1.ஜோதிர்லதா கிரிஜா.நாங்களும் வாழ்கிறோம்,                                                                                                    கிருபாலட்சுமி அலர்மதி பதிப்பகம், சென்னை – 600 101, 1984.                                                                      
2.ஜோதிர்லதா கிரிஜா.,மன்மதனைத் தேடி,                                                                                                              இந்திரா பதிப்பகம், திருச்சி – 13, 1989.
3. ஜோதிர்லதா கிரிஜா.மறுபடியும் பொழுது விடியும்,                                                                                      திருவரசு புத்தக நிலையம், சென்னை – 17, 1999.
4. ஜோதிர்லதா கிரிஜா.,போராட்டம்,நியூ செஞ்சுரி புக்ஹவுஸ், சென்னை – 98, 2005.






                                

0 comments:

Powered by Blogger.

  © Free Blogger Templates Blogger Theme II by Ourblogtemplates.com 2008

Back to TOP